Tuesday 11 October 2016

தமிழரின் தொன்மை வரலாறு கூறும் கீழடி

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பதை உலக வரலாறு, தொல்லியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதனை வெளிப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழந்தமிழரின் வரலாற்று எச்சங்கள் மிகுந்து காணப்படுகின்றன. நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடலியல் ஆய்வுகளிலும் தமிழர்தம் தொன்மங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. மிகப்பெருமளவில் முழுவதுமாக ஆய்வு மேற்கொள்ள வரலாறு, தொல்லியல், நாணயவியல், வேதியியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்ட முறையான குழு அமைத்து பரந்துபட்ட ஆய்வினை மேற்கொள்ளும்பொழுது பண்டைத் தமிழரின் முழுமையான வரலாற்றினை உலகறியச் செய்யமுடியும்.

இன்றும்கூட கீழ்த்திசை நாடுகளிலும், சீன நாட்டிலும் தமிழரின் தொன்மங்கள் விரவிக்கிடக்கின்றன. பூம்புகார் கடல் அகழாய்வில் சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட நாகரிகத்துடன் திகழ்ந்த கட்டுமானங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டன. பூம்புகாரில் நிலப்பகுதியில் நீர் வெளியேற்றும் தூம்பு கண்டறியப்பட்டது. சுடப்பட்ட அகலமான செங்கற்கள் கொண்டு கட்டுமானப் பகுதி திகழ்ந்தது.









அண்மையில் சிவகங்கை மாவட்டம் மதுரை அருகில் உள்ள கீழடிப் பகுதியில் மத்தியத் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏறத்தாழ 2500இலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதையுண்ட நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. 11.10.2016 அன்று தொல்லியல், வரலாறு துறை சார்ந்த நண்பர்களுடன் இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டோம். இதிலிருந்து இங்குள்ள கட்டுமானத்திற்குப் பயன்படுத்தியுள்ள செங்கல்லின் அமைப்பானது புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்க காலத்து கோட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கற்களின் அமைப்பினை ஒத்துத் திகழ்வதைக் காணமுடிந்தது. இதுபோன்ற செங்கல்லே பூம்புகார் அகழாய்விலும் கிடைத்தது.





மேலும் பயன்படுத்தியிருந்த எலும்பாலான ஆயுதங்கள், சிவப்பு கருப்பு நிறத்தில் அமைந்த பானை ஓடுகள், உறைகிணறுகள் இவைகளையும் ஆய்ந்து நோக்கும்போது இவற்றின் தொன்மை நன்கு விளங்குகின்றது. 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் இந்நகரம் திகழ்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வு நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் ஒரு தொழிலகம் இயங்கியதற்கான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டிகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் சிறு கால்வாய் வழியாக அடுத்த தொட்டிக்கு நீர் செல்லுமாறு அமைக்கப்பட்டு இறுதியாக ஒரு பெரிய கால்வாய் வழியாக முழு நீரும் வெளியேறி ஆற்றில் கலக்கும்படி அமைந்துள்ள அமைப்பினைக் காணமுடிகின்றது. இத்தொழிலகம் சாயத்தொழில் நடைபெற்ற இடமாகவோ அல்லது ஆயுதங்கள், அணிகலன்கள் செய்யப்பெற்ற தொழிலமாகவோ இணைந்திருக்கக் கூடலாம்.

உறைகிணற்று சுடுமண் உறையானது பழந்தமிழனின் தொழில்நுட்பத் திறனை அறிய முடிகிறது. நெல் கருக்காயினை சேற்றில் குழைத்து அமைத்து அதன் மேல் புறமும், அடிப்புறமும் சாதாரண சேற்றினைக் குழைத்து நெருப்பில் சுட்டு எடுக்கப்படும் உறையினை பழந்தமிழகத்தில் கிணறு கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வுறையானது இரு புறமும் சிவப்பு நிறத்திலும், நடுமையப்பகுதி கருமையாகவும் அமைந்திருக்கும். இத்தகு உறைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. அதோடன்றி பானை ஓடுகள் பழந்தமிழ் எழுத்தமைதியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பானையோட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துப் பொறிப்பினை இந்தியத் தொல்லியல் துறை அமைத்துள்ள புகைப்படத்தில் சேந்தன் அவதி என்று எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க நூல்களான நற்றிணை மற்றும் குறுந்தொகையில் சேந்தன் அழிசி என்ற மன்னனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சங்க காலத்திற்கு முன்னர் பயன்பட்ட நாணயத்திலும் சேந்தன் அழிசி பெயர் பொறிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேந்தன் அழிசியே இப்பானையோட்டில் சேந்தன் அவதி என குறிப்பிட்டிருக்கலாமோ என்றும் கருத இடமுண்டு. இவைகளை வைத்துப் பார்க்கும்போது சங்க காலத்தில் பேசப்பட்ட குறுநில அரசனின் பெயர் கொண்ட பானை ஓடு இங்கு கிடைத்துள்ளது சிறப்பானதாக அமைந்துள்ளது.


இவ்வளவு சிறப்பு கொண்ட தொல் தமிழரின் தொன்மை நாகரிகத்தை காட்டக்கூடிய இப்பகுதியினை அரசு கையகப்படுத்தி முழுமையான ஓர் ஆய்வினை மேற்கொண்டு இன்னும் பல வரலாற்று எச்சங்களை வெளிவுலகிற்குக் கொண்டுவருவதோடு ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளை அதே நிலையில் மேற்கூரையமைத்து தொடர்ந்து பராமரித்தால் தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றை அறியவும் எதிர்கால சமுதாயத்திற்குக் கொண்டு செல்லவும் பயன்படும் என்பதைத் தெரிவிப்பதோடு அரசோடு இணைந்து பாதுகாப்பு பணியில் மக்களும் முழு உணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டு தமிழர்தம் பெருமையை பாதுகாப்போம். 

நன்றி : தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 16-31, 2016


Friday 1 January 2016

தஞ்சாவூர் அருகே முற்கால சோழர் உறைகிணறு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் அருகே 2,000 ஆண்டு களுக்கு முற்பட்ட, முற்கால சோழர் சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைத்து நொறுக்கப்பட்டு, மண் குவியலானது.





தஞ்சை-திருவையாறு இடையே, அம்மன்பேட்டையிலி ருந்து, பனவெளி, தென்பெரம்பூர் செல்லும் சாலையில் உள்ளது நாகத்தி கிராமம். தஞ்சையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரின் நடுவில், ஊராட்சி அலுவலகம், சுப்பிரமணியர் கோயில் மற்றும் காளி கோயிலையொட்டி, பிரதமரின் மின் ஆளுகைத் திட்டத்தில், ரூ.17 லட்சம் மதிப்பில் பொது கணினி சேவை மையக் கட்டிடம் கட்டுவதற்காக குழிகள் தோண்டியபோது, சுடு மண் உறைகிணறு இருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த வரலாற்று ஆய் வாளரும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதருமான மணி.மாறன், எஸ்.தேவதாஸ் ஆகியோர் கடந்த 25-ம் தேதி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

கள ஆய்வு குறித்து மணி.மாறன் கூறியது: கல்லணையை அமைத்த கரிகால் சோழன் வாழ்ந்த முற்காலச் சோழர்கள் காலத்திலேயே சிறப் பிடம் பெற்ற இந்தப் பகுதி ஆர்க்காட்டுக் கூற்றமாகும்.
நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில், சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஆர்க்காட்டுக் கூற்றத்தின் குறுநில மன்னர்களான, சேந்தன், அழிசி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இப்பகுதியில் அழிசிக்குடி என்ற ஊர் உள்ளது. இவர்கள் காலத்தில்தான் இக்கூற்றத்தின் கச்சமங்கலம் பகுதியில் வெண் ணாற்றின் குறுக்கே மலையைப் பிளந்து, தடுப்பணை அமைக்கப் பட்டது.

வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஆர்க்காட்டுக் கூற்றத்தில் அமைந் துள்ள நாகத்தி கிராமம் ‘நாகத்தீவு’ என்றும் அழைக்கப்பட்டது. நான்கு புறமும் நீரால் சூழப்பட்டு, தனித் தீவாகவே இந்த ஊர் இன்றும் உள்ளது. ஊரின் மேற்கே பனவெளி என் னும் பகுதியில் பிரியும் வெட்டாறு, நாகத்தியை நடுவில் கொண்டு கிழக்கே அம்மன்பேட்டைக்கு முன்னர் ஒன்று சேருகிறது. ஆற்றின் நடுவில் அமைந்த இப்பகுதி நாகம் படம் எடுப்பதுபோல அமைந்துள்ள தால் நாகத்தீவு என்று அழைக்கப் பட்டது. பல்லவர் காலத்திலும் இந்த ஊர் சிறப்பிடம் பெற்று விளங் கியது. இங்குள்ள அய்யனார் சிற்பம், தேவியுடன் அமைந்துள்ளது. இது பல்லவர் காலத்து படைப்பாகும்.
இப்பகுதியில் கட்டிடம் கட்ட குழி தோண்டியபோது, சுமார் ஐந்தடி ஆழத்தில் சுடுமண் உறைகள் கொண்டு அமைக்கப்பட்ட உறை கிணறு காணப்பட்டது. உறைகிணறு கள் குறித்து சங்க நூல்களான பட்டினப்பாலையும், சிலப்பதிகார மும் குறிப்பிடுகின்றன.

இந்த உறைகிணறு, 2,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக உள்ளது. 60 செ.மீ. விட்டம், 40 செ.மீ. உயரம் கொண்ட சுடுமண் உறைகள் ஒன்றின் மீது ஒன்று செருகி அடுக்கப்பட்டு, கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 அடி உயரம் வரை காணப்பட்ட இந்த சுடுமண் உறை யின் உள் மற்றும் வெளிப்புறம் சிவப்பு நிறத்திலும், நடுப்பகுதி கருப்பு நிறத்திலும் காணப்படுகின் றது. இது, பண்டைத் தமிழரின் சிறந்த தொழில்நுட்பமாகும்.

உறைகிணற்றின் அருகிலேயே சிவப்பு நிறத்திலும், கருப்பு நிறத் திலும் செய்யப்பட்ட மண்கலங் களின் உடைந்த பாகங்களையும் காணமுடிந்தது. சில ஆண்டு களுக்கு முன்னர் இவ்வூரின் வேறொரு பகுதியில் வீடு கட்ட குழி தோண்டியபோது, எலும்பு களுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

இக்கிணறு, அருகில் ஓடும் வெட்டாற்றின் கரையிலிருந்து சுமார் 300 அடி தூரத்தில் உள்ளது. இதேபோன்ற உறைகிணறுகள் ஆர்க்காட்டுக் கூற்றத்தில் அமைந்த வரகூர், தாழக்குடி, கொண்டவிட் டான்திடல் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆர்க்காட்டுக் கூற்றம் முழுவதையும் கள ஆய்வு செய்தால், பல்வேறு புதிய வரலாற் றுத் தகவல்களை வெளிக்கொணர முடியும்” என்றார்.

அரசு அலுவலர்களின் அலட்சியம்
இதுகுறித்து நேரில் அறிவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றபோது, அங்கு உறைகிணறு இருந்ததற்கான சுவடே இல்லாமல் காணப் பட்டது. மணி.மாறன் குழுவினர் இந்த உறைகிணற்றைப் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துச் சென்ற சில மணி நேரத்தில், அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அலுவலர்கள் வந்துள்ளனர்.
இந்த உறைகிணற்றில் புதையல் இருப்பதாக தகவல் கிடைத்ததாகக் கூறி, அந்தக் கிணற்றைச் சுற்றி ஆட்களையும், பின்னர் பொக்லைன் இயந்திரத்தையும் கொண்டு தோண்டச் செய்ததாகவும், சுமார் 15 அடி ஆழம் வரை உறைகிணறு இருந்ததாகவும், ஆனால் அவை உடைந்து சுக்குநூறாக நொறுங்கிவிட்டதாகவும், அவற்றை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது, “யாரோ ஒருவர் புதையல் இருப்பதாகக் கூறினார் என்பதற்காக, பாதுகாக்கப்பட வேண்டியதும், மிகவும் கவனமாகக் கையாள வேண்டியதுமான தொல்லியல் சின்னத்தை, துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை மற்றும் உதவி ஏதுமின்றி அவசர கோலத்தில் உடைத்துள்ளனர்” என்று வேதனை தெரிவித்தனர்.
-தி இந்து
----------------------------------------------------------
அண்மையில் நாகத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. அவற்றை வெளியிட்ட இதழ்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தினத்தந்தி, 27.12.2015
தினகரன், 27.12.2015
தினமலர், 27.12.2015
தினமணி, 27.12.2015
மாலை மலர், 27.12.2015
தமிழ் முரசு, 27.12.2015
தி இந்து, 28.12.2015 
The New Indian Express. 28.12.2015  
----------------------------------------------------------

Tuesday 30 December 2014

கந்தர்வக்கோட்டை அருகில் சோழர் காலத்து நந்தி, சிவலிங்கம் தஞ்சை தமிழ்ப் பண்டிதர் தகவல்

தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில், நாட்டாணி கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சரஸ்வதி மஹால் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் கூறியதாவது:

தஞ்சையில், கோட்டைச்சுவரின், நீர் அரணாகத் திகழும் அகழியுடன் கூடிய கோநகரமாக திகழ்ந்தது வல்லம். வல்லத்தின் புறநகர் பகுதியாக விளங்கிய ஊர் நாட்டாணிம். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில், வல்லத்தை கடந்து தென்புறமாக பிரிந்து செல்லும் சாலையில், நாட்டாணி உள்ளது. 

இவ்வூரின் மேற்கில் படத்தாளத்தியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திடலிலிருந்து, சில மீட்டர் தொலைவில், காட்டுப்பகுதிக்குள் சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் காணப்படுகிறது. அம்மன் கோவில் அருகே, சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இவையும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி, சங்க காலம் முதல், பிற்கால சோழர்களின் காலம் வரை மிகவும் சிறப்புற்று திகழ்ந்திருக்க வேண்டும். இங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் கோவில் முழுவதும் அழிவுற்று, இந்த நந்தியும், சிவலிங்கமும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 20.10.2014

Monday 29 December 2014

ஆதீண்டு குற்றி

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தன. இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வந்தனர். ஆடுகளை புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம், நல்லினம் என்றும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. அஃறிணை உயிர்களின் உணர்வினை மதித்து அவைகளுக்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லுக்கு தமிழ் இலக்கியத்தில் "ஆதீண்டு குற்றி' என்று பெயர் வழங்கப்பட்டது.

மனிதர்கள் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும்பொழுது கையால் சொறிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகளுக்குத் தினவு ஏற்படும்பொழுது அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவைப் போக்கிக்கொள்ள முற்படும். மாடுகள் அடிக்கடி உராய்வதால் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாகவும், அவ்வுயிர்களின் உணர்வினை மதிக்கும் விதமாகவும் தொல் பழங்காலந்தொட்டு, ஆடு, மாடுகள் தினவைப்போக்க பலகைக் கற்களையும், குத்துக்கற்களையும், மரக்கட்டைகளையும் நட்டுள்ளனர். இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இதற்காக நடப்படும் கற்களை ஆதீண்டு குற்றி, மாதீண்டு குற்றி என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. இன்று மாடுரசு கல் என அழைக்கப்படும் ஆதீண்டு குற்றி பற்றி இலக்கியங்கள் கூறுவதைக் காண்போம்.

சேந்தன் திவாகரத்தில், முப்பத்திரண்டு அறத்தின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. அவற்றுள் ஆவுரிஞ்சு நடுதறி அமைப்பது அறச்செயலாகப் போற்றப்படுகின்றது.
சீவக சிந்தாமணியின்,

பூத்த கோங்கு போற்பொன் சுமந்துளா
ராய்த்தியர் நலக்கா செறூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினன்

எனும் செய்யுளுக்கு உ.வே.சா., எழுதியுள்ள விசேடக் குறிப்பில், "கோங்க மலர்கள் பொன்னிறமுடையவை. ஆதீண்டு குற்றி தினவைப்போக்கிக் கொள்ளுதற் பொருட்டுப் பசுக்கள் உரிஞ்சுக் கொள்ளுதற்கு நாட்டப்பட்டுள்ள கட்டை' என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,


சதுக்கமுந் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண் தலைத்கொடியொடு மண்ணி யமைவர
(225-227)

இதன் பொருள் கூறுமிடத்து "கந்துடை நிலையினும் ஆதீண்டு குற்றியையுடைய இடத்திலும்' என்கின்றது. இதனையே தமிழ் லெக்சிகன் "கந்து' எனும் சொல் ஆதீண்டு குற்றியைக் குறிப்பதாகச் சொல்கின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வகை ஆதீண்டு குற்றிகள் வழக்கில் இருந்ததை உரையாசிரியர்களின் உரைக்குறிப்பால் அறியமுடிகின்றது.
ஆதீண்டு குற்றி பசுக்கள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்தாலும், பிற விலங்குகளும் உராய்ந்து கொள்ள பயன்பட்டது என்கிறார் சேனாவரையர் (தொல்,சொல். 49 மேற்கோள் உரை). சேனாவரையனாரின் உரைக்கு வலு சேர்ப்பது போல் ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக்கொண்டன என்பதை சங்க இலக்கியக் குறிப்புகளால் அறியமுடிகின்றது.

 குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
(ஐங்குறு.277:1-2)
 
விலங்குகள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்த கல் மாதீண்டு துறுகல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது தெரிய வருகின்றது. "ஆவுரிஞ்சு' என்னும் சொல்லாட்சி திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலத் தலமகிமைச் சருக்கத்தில் (37) குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருத்ததற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இக் கல்வெட்டுகளின் காலம் கி.பி.13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இதில் தன்மத்தறி என்றே ஆதீண்டு குற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் "தர்மத்திற்காக நடப்பட்டுள்ள கல்' என்பதாகும். இதனை நிறுவியவர்கள் பெயர்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாடுகள், யானைகள் போன்ற விலங்கினங்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் குட்டைகள் ஏற்படுத்தியிருந்தமை போன்று, மாடுகள் தங்கள் உடல் அரிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல் நட்டுள்ள முன்னோர்களின் மாண்பு போற்றுதலுக்கு உரியதன்றோ!


(மணி. மாறனின் "தமிழ் ஆய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து..)


நன்றி : தினமணி, தமிழ்மணி, 30.11.2014

பூதலூர் அருகே 10ம் நூற்றாண்டு சோழர் கால கோவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து, 25 கி.மீ., தொலைவில், பூதலூர் அருகில் அமைந்துள்ளது ஐம்பது மேல்அகரம். இங்கு, சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் ஆய்வு செய்த போது, பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இடிந்து போன கோவிலில் சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிற்பங்களைக் கண்டறிந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:
சோழர் காலத்தில், வளநாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய வீரசிகாமணி ஏரியின் வட கரையில், ஐம்பதுமேல் அகரம் அமைந்துள்ளது. பராந்தக சோழன் காலத்தில் இந்த ஏரியை, புத்தாமூர் கனகசேனப்பிடாரன் என்ற சமணப்பள்ளியைச் சேர்ந்தவர் பராமரித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் காலத்தில், அவரது படைத்தளபதியாக விளங்கிய ஜெயமூரி நாடாள்வான் என்பவர், இப்பெரும் ஏரியைப் பராமரிக்கும் அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற வீரசிகாமணி பேரேரி, இன்று பரப்பளவில் சுருங்கி, சிறு குளமாக காணப்படுகின்றது. மேலும், 15ம் நூற்றாண்டில் சாளுவத் திருமலைத்தேவ மகாராஜர் சோழ மண்டலத்தில், விஜயநகரப் பேரரசின் மகா மண்டலேஸ்வரராக இருந்தார். இவரது கல்வெட்டுகள் தஞ்சை, நாகை மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த சாசனம் சில கிராமங்களில் வசூலிக்கப்படும் வரியைத் தவிர்த்து, அவற்றை இறையிலி கிராமங்களாக அறிவித்ததைத் தெரிவிக்கிறது. ஐம்பதுமேல்அகரத்தில், கி.பி., 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய சிவாலயம் உள்ளது. காலபோக்கில் அழிவுற்று, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர், தனித்த சிவலிங்க பானம் போன்றவை காணப்படுகிறது. ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், நான்கடி உயரத்தில் வெள்ளை நிறக் கல்லில் அமைந்துள்ளது. விநாயகர் சிற்பம், மூன்றரையடி உயரத்தில், துதிக்கை சிதைந்த நிலையில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம், மிகவும் சிதிலமுற்ற நிலையில் கோவிலின் சுவர் அருகே கிடக்கிறது. கற்றளியாக இருந்த கோவில் அழிவுற்றதால், 15ம் நூற்றாண்டில் செங்கல் கட்டுமானமாகப் புதுப்பிக்கப்பட்டு, வழிபாட்டில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதுவும் இடிந்திருக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி : தினமலர், 26.11.2014

கச்சமங்கலம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்

தஞ்சாவூரிலிருந்து பூதலூர், ஒரத்தூர் வழியாகக் கல்லணைக்குச் செல்லும் வழியில் வெண்ணாற்றின் குறுக்கே மிகவும் பழமையான தடுப்பணை அமைந்துள்ள கச்சமங்கலம் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இந்த அணையை வியாழக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் தெரிவித்தது:
இந்தப் பகுதியில் வெண்ணாறு 2000 ஆண்டுகளாக ஓடி வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் படகுகளில் ஏற்றப்பட்டு எள்ளுப்பொதிகள் கொண்டு செல்லப்பட்டதை வெண்ணுக்கரை எள்ளுப்பாறு எனத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெண்ணாற்றில் கச்சமங்கலம் என்ற ஊரில் இயற்கையாக அமைந்த மலையின் பாறை வெட்டப்பட்டு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவுக்குப் பாறைகள் வெட்டப்பட்ட வழியிலேயே வெண்ணாறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆற்றின் போக்கில் அமைந்த ஒரத்தூர் வரை இந்தப் பாறைகளைக் காணலாம். இதிலிருந்து முற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் நேரிமலை பிளக்கப்பட்டு வெண்ணாற்றில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்துதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கல்லணைக் கால்வாயில் பூதலூரின் மேற்கே தொடங்கி தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பகுதி வரை 23 கி.மீ. தொலைவுக்கு உள்ள பாறைகள் நவீன இயந்திரங்களைக் கொண்டு பிளக்கப்பட்டு நீர் வழி உருவாக்கப்பட்டுள்ளது.

நற்றிணை, குறுந்தொகை பாடல்களாலும், சேந்தன் வெளியிட்ட காசுகளாலும், உ.வே.சா. மற்றும் சிவக்கொழுந்து தேசிகர் குறிப்புகளாலும் இப்பகுதியில் இருந்த மலை உடைக்கப்பட்டு வெண்ணாறு செல்வதை அறிய முடிகிறது.
நேரிமலை தற்போது வெண்ணாற்றின் போக்கில் கச்சமங்கலம், மாறனேரி, ஒரத்தூர் உள்ளிட்ட ஊர்களில் ஒரு காலத்தில் அமைந்திருந்த மலை. வெண்ணாறு ஓடிக்கொண்டிருக்கும் அம்மலையின் தரைமட்ட பகுதியை மட்டுமே இன்று காண முடிகிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி திருசடை முடிநாதர் கோயிலில் (சடையார் கோயில்) ரூ. 31.70 லட்சத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைப் பாதுகாப்பில் உள்ள இக்கோயில் தொல்லியல் நினைவுச் சின்னமாக உள்ளது. இக்கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணைக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

அங்கு வந்து செல்கிற சுற்றுலா பயணிகள் திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடிநாதர் கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் இப்பகுதி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகரன், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறைக் காப்பாட்சியர் தங்கதுரை, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதர் மணி. மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி தினமணி 19.12.2014

Monday 21 July 2014

சோழர் காலத்து உறை கிணறு கண்டுபிடிப்பு


 Photo: சோழர் காலத்து உறை கிணறு கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில் தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில் உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது: சோழர்கள் காலத்தில் நீர்மேலாண்மைச் செயல்பாடுகள் உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை கலிங்குகள் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

நீர் வற்றிய கோடைக்காலங்களில் இக்கிணறுகளிலிருந்து நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும் தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும் கிணறுகள் இருப்பதைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில் கால்வாயின் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாழக்குடி பகுதியில் வெட்டாற்றில் சோழர் காலத்திய உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின் இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது சோழர் காலத்திய கட்டுமான தொழில்நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை ஆற்றில் மணல் அற்றுப்போனதால் நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில் தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில் உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது: சோழர்கள் காலத்தில் நீர்மேலாண்மைச் செயல்பாடுகள் உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை கலிங்குகள் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது.

நீர் வற்றிய கோடைக்காலங்களில் இக்கிணறுகளிலிருந்து நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும் தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும் கிணறுகள் இருப்பதைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில் கால்வாயின் பல்வேறு இடங்களில் உறை கிணறுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாழக்குடி பகுதியில் வெட்டாற்றில் சோழர் காலத்திய உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின் இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது சோழர் காலத்திய கட்டுமான தொழில்நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை ஆற்றில் மணல் அற்றுப்போனதால் நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி தினகரன், 15.7.2014


தஞ்சை அருகே சோழர் காலத்து உறைகிணறு வெட்டாற்றில் கண்டெடுப்பு, தினத்தந்தி, 15.7.2014
வெட்டாற்றில் சோழர்கள் கால உறைகிணறுகளின் தடம், தினமலர், 15.7.2014 
சோழர் காலத்து உறைகிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு, காலைக்கதிர், 15.7.2014
சோழர் கால உறை கிணறு, சுடுமண் குழாய்கள், தி இந்து, 16.7.2014
Ancient well, clay pipes unearthed in river bed, The New Indian Express, 16.7.2014