Monday 29 December 2014

ஆதீண்டு குற்றி

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தன. இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வந்தனர். ஆடுகளை புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம், நல்லினம் என்றும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. அஃறிணை உயிர்களின் உணர்வினை மதித்து அவைகளுக்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லுக்கு தமிழ் இலக்கியத்தில் "ஆதீண்டு குற்றி' என்று பெயர் வழங்கப்பட்டது.

மனிதர்கள் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும்பொழுது கையால் சொறிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகளுக்குத் தினவு ஏற்படும்பொழுது அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தன் தினவைப் போக்கிக்கொள்ள முற்படும். மாடுகள் அடிக்கடி உராய்வதால் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாகவும், அவ்வுயிர்களின் உணர்வினை மதிக்கும் விதமாகவும் தொல் பழங்காலந்தொட்டு, ஆடு, மாடுகள் தினவைப்போக்க பலகைக் கற்களையும், குத்துக்கற்களையும், மரக்கட்டைகளையும் நட்டுள்ளனர். இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இதற்காக நடப்படும் கற்களை ஆதீண்டு குற்றி, மாதீண்டு குற்றி என்று இலக்கியங்கள் சுட்டுகின்றன. இன்று மாடுரசு கல் என அழைக்கப்படும் ஆதீண்டு குற்றி பற்றி இலக்கியங்கள் கூறுவதைக் காண்போம்.

சேந்தன் திவாகரத்தில், முப்பத்திரண்டு அறத்தின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. அவற்றுள் ஆவுரிஞ்சு நடுதறி அமைப்பது அறச்செயலாகப் போற்றப்படுகின்றது.
சீவக சிந்தாமணியின்,

பூத்த கோங்கு போற்பொன் சுமந்துளா
ராய்த்தியர் நலக்கா செறூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினன்

எனும் செய்யுளுக்கு உ.வே.சா., எழுதியுள்ள விசேடக் குறிப்பில், "கோங்க மலர்கள் பொன்னிறமுடையவை. ஆதீண்டு குற்றி தினவைப்போக்கிக் கொள்ளுதற் பொருட்டுப் பசுக்கள் உரிஞ்சுக் கொள்ளுதற்கு நாட்டப்பட்டுள்ள கட்டை' என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,


சதுக்கமுந் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண் தலைத்கொடியொடு மண்ணி யமைவர
(225-227)

இதன் பொருள் கூறுமிடத்து "கந்துடை நிலையினும் ஆதீண்டு குற்றியையுடைய இடத்திலும்' என்கின்றது. இதனையே தமிழ் லெக்சிகன் "கந்து' எனும் சொல் ஆதீண்டு குற்றியைக் குறிப்பதாகச் சொல்கின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வகை ஆதீண்டு குற்றிகள் வழக்கில் இருந்ததை உரையாசிரியர்களின் உரைக்குறிப்பால் அறியமுடிகின்றது.
ஆதீண்டு குற்றி பசுக்கள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்தாலும், பிற விலங்குகளும் உராய்ந்து கொள்ள பயன்பட்டது என்கிறார் சேனாவரையர் (தொல்,சொல். 49 மேற்கோள் உரை). சேனாவரையனாரின் உரைக்கு வலு சேர்ப்பது போல் ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக்கொண்டன என்பதை சங்க இலக்கியக் குறிப்புகளால் அறியமுடிகின்றது.

 குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
(ஐங்குறு.277:1-2)
 
விலங்குகள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்த கல் மாதீண்டு துறுகல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது தெரிய வருகின்றது. "ஆவுரிஞ்சு' என்னும் சொல்லாட்சி திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலத் தலமகிமைச் சருக்கத்தில் (37) குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருத்ததற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இக் கல்வெட்டுகளின் காலம் கி.பி.13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு ஆகும். இதில் தன்மத்தறி என்றே ஆதீண்டு குற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் "தர்மத்திற்காக நடப்பட்டுள்ள கல்' என்பதாகும். இதனை நிறுவியவர்கள் பெயர்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாடுகள், யானைகள் போன்ற விலங்கினங்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் குட்டைகள் ஏற்படுத்தியிருந்தமை போன்று, மாடுகள் தங்கள் உடல் அரிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல் நட்டுள்ள முன்னோர்களின் மாண்பு போற்றுதலுக்கு உரியதன்றோ!


(மணி. மாறனின் "தமிழ் ஆய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து..)


நன்றி : தினமணி, தமிழ்மணி, 30.11.2014

1 comment:

  1. வணக்கம்.
    தங்களின் வலைப்பதிவைக் கண்டு மிக்க மகிழ்ச்ச்சி. 2014லிலேயே நிற்கிறதே இன்னும் தொடரவேண்டும் என்பது என்னவா. "ஆ தீண்டு குற்றி" பற்றிய அருமையான செய்திகளை எழுதியிருக்கிறீர்கள். குற்றி என்ற சங்கச்சொல்லாட்சி ஆழ சிந்திக்க வைக்கிறது.
    தங்களுடன் மகாலில் உரையாடியது மட்டற்ற மகிழ்ச்சி. பணியில் அதிகம் கவனம் இருந்ததால் இலக்கியம் பற்றி உரையாடும் வாய்ப்பு குறைந்தே போனது. ஆயினும் இணையவழி காண முடிந்ததில் மேலும் மகிழ்ச்சி. எனது வலைப்பதிவு nayanam.blogspot.com
    தங்களின் "தமிழ் எண்ணும் எழுத்தும்" என்ற நூலை படித்துவிட்டேன். மிக அருமையான செய்திகள். தமிழ் ஒருங்குறி முயற்சிகளுக்கு அது ஏதுவாக இருக்கும் என்பது திண்ணம். சோழர்கால எழுத்துகளை அதில் நீங்கள் வகைப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பு. மேலும் பல கருத்துகளை எழுதவேண்டும். பின்னர் மேலும் எழுதுகிறேன்.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete