Wednesday 23 April 2014

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
தஞ்சை, ஏப் 24, தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் பெருமான் சதய விழா வரும் 25ம்தேதி முதல் 3 நாட்களுக்கு தஞ்சை களிமேட்டில் நடைபெற உள்ளது.

 மாமன்னன் ராஜராஜனுக்கு தஞ்சையில் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அப்பர் பெருமானுக்கோ திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா எடுக்கப்பட்டு வருகிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்ததாக கருத்து நிலவுகிறது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குரு பூஜை நடைபெறுகின்றது. பல்வேறு தலங்களுக்கு சென்று பாடல்களைப் பாடியுள்ள அப்பர் பெருமானுக்கு அந்தந்தத் தலங்களில் விழா கொண்டாடுவது சிறப்பான ஒன்றாகும். ஆனால் அவரோடு தொடர்பில்லாத ஒரு சிற்றூரில் கடந்த 85 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெறுகின்றது.
தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு என்னும் கிராமத்தில் விழா இப்போதும் நடக்கிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வட கரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன், உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது.  இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான ஓவியம். குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி மக்கள் வணங்குகின்றனர்.
இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இவ்வூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் 86ஆம் ஆண்டு சித்திரை சதய விழா 25, 26, 27.4.2014 மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிகமான ஊர்களில் மடங்கள் நிறுவப்பெற்றது அப்பருக்கு மட்டுமே என சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் தெரிவித்தார். 
நன்றி : தினகரன், 24.4.2014

Monday 7 April 2014

தமிழறி மடந்தை கதை

"மச்சான், நான் எங்கப் போனாலும் கண்டுபிடிச்சு வந்துடுவியா?" என்ற அவளுடைய கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அவன், "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீ போனாக்கூட நான் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்துடுவேன்" என்பது போன்ற நெஞ்சத்தில் நினைவுகளைத் தேக்கிவைத்துள்ள உணர்வுபூர்வமான கதைகளையும், "ராஜாவோட உயிரு உயரத்துல மலை மேல இருக்கிற குகையில இருக்கிற பொந்துக்குள்ள கிளியோட கழுத்துல இருக்காம்" என்று ஆர்வத்தையும் அதிசயத்தையும் நம்முள் உண்டாக்கும் கதைகளையும் இளம் வயது முதலே நாம் கேட்டு வளர்ந்து வந்துள்ளோம். அவை நம்மை நன்னெறிப்படுத்துவதோடு, நல்ல வாழ்விற்குத் துணையாக அமைகின்றன. ஒரு  செய்தியை நேரடியாகச் சொல்வதற்கும் கதையாகச் சொல்வதற்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. கதையாகச் சொல்லும் நிலையில் மனதில் பெரும் தாக்கத்தை உணரமுடியும். அவ்வாறான ஒரு வகை கதைதான் மணி.மாறனின் தமிழறி மடந்தை கதை.


 கதை
அளகாபுரி மன்னனான அளகேஸ்வரனின் மகள் ஏலாங்குழலாள்.  பாடலிபுத்திர அதிபதியான பத்திரகிரியின் மகன் சந்தனகுமாரன். படிப்பில் ஈடுபாடின்றி வீட்டைவிட்டு வெளியேறிய அவன், ஏலாங்குழலாளைக் கண்டு தன் மனதைப் பறி கொடுக்கிறான். அவளும் தன் மனதை பறி கொடுக்கிறாள். அவள் தன் எண்ணத்தை அவனிடம் வெளிப்படுத்த எடுக்கும் முயற்சி தோற்று, இருவரும் ஒன்றுசேரா நிலை ஏற்படுகிறது. அரசகுமாரி தன் உயிரை மாய்த்துக்கொள்ள, அதையறிந்த அரசகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான்.  இதிலிருந்து அவர்களுடைய மறுபிறவி கதை தொடங்குகின்றது.மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வந்து நம் மனதில் பதிந்துவிடுகின்றனர். 
அற்ப ஆயுளில் இறந்த இளவரசியும், இளவரசனும் சாவடியில் இருந்துகொண்டு அங்கு வருபவர்களைத் தங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டுவந்தபோது ஔவையார் வந்து தங்குகிறார். பேய் வடிவில் வந்த அவர்களிடம் கதையைக் கேட்ட ஔவையார் அவர்கள் வாழ்ந்த விதத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பின்னர் ஔவையார், உறையூரில் கரிகாற்சோழனிடம் இருக்கும் பன்னீராயிரம் பெண்களில் முதல்வியான மரகதவடிவுக்கு மகளாகப் பிறக்கப்போவதையும், அவளுக்கு மன்னன் தமிழறி மடந்தை எனப் பெயர் சூட்டப்போவதையும் கூறுகிறாள். பின் நடக்கவிருப்பனவற்றையும் ஔவையார் கூறுகிறாள். இவ்வாறாகக் கதையின் போக்கு அமைகின்றது.ஔவையாரின் வாக்குப்படி அவர்களுடைய வாழ்வு அமைந்ததா என்பதும், அவ்வாழ்வினை எதிர்கொள்ள நிகழ்ந்த நிகழ்வுகளும் கற்பனை நயத்தோடு மனதில் பதியும் வகையில் மிகவும் சிறப்பாக தரப்பட்டுள்ளன.

வர்ணனையும் கற்பனையும்
அவளுக்கான அரண்மனை பற்றிய வர்ணனை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. அந்த அரண்மனையில் ஏழு மாடியும், அறுபத்து நான்கு வாசலும் இருப்பது பற்றியும் அந்த ஒவ்வொரு வாசலுக்கும் இருக்கும் சிறப்பு மற்றும் புதுமை பற்றியும் கூறப்பட்டுள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. (ப.14)

சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்றுவிட்டு தமிழறி மடந்தை வருவதைப் படிக்கும்போது நாமும் அங்கே அவளை எதிர்கொண்டு அழைப்பதை போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. "...இவள் தமிழறி மடந்தை என்னும் பெயர் கொண்டு, முன்னர் ஔவையார் கூறியதுபோல் சோழ மாமன்னனால் சகல வசதிகளும், நன்மைகளும் பெற்று, வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒர நாள் பச்சை பல்லக்கின் மீது ஏறிக்கொண்டு பனிரெண்டாயிரம் பெண்களும் தொழுதுவர, பகலில் பந்தம் பிடிக்க, வெண் சாமரம் வீச தோழிமார்கள் இரண்டு பக்கத்திலும் தாவிக்கொண்டு வர கட்டியக்காரர் கட்டியங்கூறி எச்சரிக்கை செய்ய, பதினெட்டு மேள வாத்தியங்கள் முழங்க, தும்புரு வீணை, கின்னரி, இராவணாதிரம், குடமுழர் போன்ற பலவித சங்கீதம் முழங்கிவர, மிகவும் அழகு நிரம்பிய அவள் பவனி வருவதைக் கண்ட இளைஞர்கள் எல்லாம் மூர்ச்சையாய் விழுந்திட சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்று அங்கே அவர் முகம் பெற்றுத் திரும்பி வருகின்றாள்....." (ப.20)

நூல்முழுவதும் இவ்வாறான நிகழ்வுகள் நம் கண் முன் நடப்பதைப் போல காட்டப்பட்டுள்ள விதம் படிப்பவர் மனதில் தங்கிவிடும்.   

நடக்கும் நிகழ்வுகள் வெண்பா வடிவில் தரப்பட்டு உரிய விளக்கங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

தூக்கம் நீங்கி ஔவையார் அருளிச்செய்த வெண்பா.

வெண்பாவிருக்காலிற் கல்லானை வெள்ளோலைக்
கண்பார்த்துக் கையாலெழுதானைப் - பெண்பாவி
பெற்றாளோ பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளோ
பெற்றோமற் றெற்றோமற் றெற்று.

இதனைக் கேட்டு அது கல்வி கற்ற பேயானதால் இந்தக் கல்வியின் பொருளை அறிந்துகொண்டு நம்முடைய பூர்வோத்திரம் எல்லாம் அறிந்து சொன்ன இவள் தேவியே என்று பயந்து சென்றது. (ப.8)

நக்கீர தேவர் வாழைத்தண்டை விறகாகக் கட்டிக் கொண்டு சமூகச்சாலையில் போய் முதல் கட்டு வாசலிலே கற்றுச் சொல்லிப் பெண்கள் இருப்பதைக் கண்டு பிறகு விலை கூறின வெண்பா.

வெய்யோன்கதிரெரிப்ப வேற்கண்ணாள்பிற்றொடரப்
பையவருதென்றற் பயனறியேன்-துய்ய
மலர்த்தடங்கண் வாய்ந்த மயிலனையீர் கொள்வீர்
விலைக்குவிறகோ விறகு.

இதனைக் கேட்ட கற்றுச்சொல்லிப் பெண்கள் இதுநாள் வரையில் நம் நாச்சியாருக்கு எதிராளி யாரும் வந்து நம்மிடம் கவி சொன்னதில்லையே, என்று வியக்கின்றனர். (ப.44)

தமிழறிவானவளுக்கும் நக்கீரருக்கும் நடக்கும் விவாதம் வெண்பா, சந்தவிருத்தம், கவி என்ற நிலைகளில் யார் வெற்றி பெறப் போகின்றார்களோ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதுடன் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அவற்றைப் படிக்கும்போதுதான் உணரமுடியும். 

சொல்லுக்கான பொருள்
புதிய சொற்களுக்கு பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆவேசம்-பேய் (ப.7),  அநத்தல்-தூக்கம் (ப.8), அரதேசி-உள்நாட்டைச் சேர்ந்த யாசகன் (அகதேசி, அரதேசி என மருவியது) (ப.16), மொண்ணச்சிகள்-திருநங்கைகளாக இருக்கலாம் (ப.29), சமூகச்சாலை-வாசல்(ப.44), ஆகடியம்-கிண்டல் (ப.57),  அஸ்தகடகம்-கைவளையல் (ப.69), மொத்தார்த்தமாக-மலுப்பலாக (ப.86), பூராயமாய்-ஆராய்ந்து (ப.89)

கதை கேட்பது, படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்ததேயாகும். இவ்வாறான பல சிறப்புக்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த நூலைப் படிப்போமே. வாசிப்பை நேசிப்போமே.

தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி.மாறன் (9443476597), தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013, ரூ.80

நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்




சிதிலமடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா

தஞ்சாவூர்,
தஞ்சை அருகே சிதிலம்அடைந்த சோழர்கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சோழர்கால கல்வெட்டு
தஞ்சையை அடுத்த செந்தலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஊர் கருப்பூர் ஆகும். இவ்வூர் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்கால கல்வெட்டில் ஆர்க்காட்டுக்கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்திய ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்துள்ள ஊர்களின் வரலாறு குறித்த ஆய்வு மேற்கொண்டு வரும் தஞ்சை சரசுவதிமகால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியதாவது:-

பல்லவர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய இப்பகுதி சோழர்காலத்திலும் சிறப்போடு திகழ்ந்தது. கி.பி. 985-ல் இருந்து கி.பி.1014 வரை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் சோழமண்டலத்தை பல்வேறு வளநாடுகளாக பிரிந்தான். அவற்றுள் தஞ்சாவூர் கூற்றம் உள்ளிட்ட 21 நாடுகளிலும் கூற்றங்களிலும் இடம்பெற்ற ஒரு வளநாடாக பாண்டிய குலாசனி வளநாடு திகழ்ந்தது. இந்த வளநாட்டில் இடம் பெற்ற ஆர்க்காட்டுக்கூற்றத்தில் அமைந்த ஒரே ஊர் ராஜராஜன் காலத்தில் மீபிரம்பில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊராகும். இந்த ஊரில் நெடுஞ்சாலையை ஒட்டி சிதைவுற்று அழியும் நிலையில் மீனாட்சி சுந்தரேசர் கோவில் உள்ளது.

சிவாலயம்
கி.பி.1311-ல் தமிழகம் நோக்கி பெரும்படையினரோடு வந்த மாலிக்காபூர் படையினரால் இப்பகுதியில் அமைந்திருந்த பல கோவில்கள் தாக்குதலுக்கு ஆளாயின. பின்வந்த விஜயநகர மன்னர்கள் காலத்தில் செந்தலை சிவன்கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக கருப்பூர் சிவாலயம், நியமம் காளாபிடாரிகோவில், அமண்குடி சமணக்கோவில் ஆகியவற்றின் இடிபாடுற்ற பகுதிகள் எடுத்து வரப்பட்டு செந்தலை கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மதில், மண்டபங்கள் ஆகியவை எடுத்து கட்டப்பட்டன. இதனாலேயே செந்தலை கோவில் கோபுரத்திலும், மதிலும், மண்டபங்களிலும் மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாதனங்களை இன்றும் நாம் காணமுடிகிறது. அவற்றுள் ஓர் கல்வெட்டு சாதனம் செந்தலை சுந்தரேசுவரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள மதில் பகுதியில் உள்ளது. இந்த சாசனத்தில் ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்புரான மீபிரம்பில் என்னும் சொல்லாட்சி காணப்படுகிறது.

கி.பி.15-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசின் ஆதிக்கத்தில் இந்த பகுதி வந்தது. இந்த காலத்தில் சோழமண்டலம், தொண்டைமண்டலம் ஆகிய 2 பகுதிகளுக்கும் ஆட்சியாளனாக திகழ்ந்தவன் கோனேரிதேவமகாராயன் ஆவான். கி.பி.1485-ல் தொடங்கி கி.பி.1495 வரை இவனுடைய ஆட்சி நீடித்தது. இந்த மன்னனின் இயற்பெயர் வைத்தியநாத காலிங்கராயன் என்பதாகும். திருவையாறுக்கு அருகில் வைத்தியநாதன்பேட்டை எனும் ஒரு ஊர் உள்ளது. கொள்ளிட ஆற்று கரையில் உள்ள திருமழபாடியில் தன் பெயரால் கோனேரிராயன் திருமணமண்டபம் என்றதோர் மண்டபத்தை படைத்தான்.

பிற்கால ஓவியம்
மன்னனின் பெயரால் மீபிரம்பிலான கருப்பூரின் ஒரு பகுதிக்கு கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இங்கு திகழும் கற்றளியான கோனேரிராஜபுரத்து சிவாலயம் சோழர்கள் காலத்தில் எட்டு பரிவாரங்களுடன் திகழ்ந்த சிறந்த கோவிலாக விளங்கியது. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஊரில் அமைந்துள்ள சோழர் காலத்திய சிவாலயம் இன்று மிகப்பெரும் மரம் வளர்ந்து மிகவும் சிதிலமுற்று காணப்படுகிறது. சிதிலமடைந்த இந்த கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் அமைந்துள்ள கட்டுமானத்தை சுற்றிலும் விஜயநகர மன்னர்கள் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் போர்வீரனின் சிற்பங்கள் மிக சிறிய அளவில் 12 செ.மீட்டர் வட்டத்திற்குள் செதுக்கப்பட்டுள்ளது.

போர் செய்யும் வீரனின் பல்வேறு நிலைகள் இந்த சிறிய சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த கோவிலின் கருவறையில் சோழர்காலத்து சிவலிங்கமும், அருகில் மற்றொரு சன்னதியில் சோழர் காலத்து அழகிய அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. கருவறையின் உட்சுவரில் பிற்காலத்திய ஓவியம் அமைந்துள்ளது. சிதிலமடைந்துள்ள சிறப்புவாய்ந்த இந்த கோவில் பாதுகாக்கப்பட்டால் எதிர்கால வரலாற்றுக்கு பயனுடையதாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி. தினத்தந்தி 11.3.2014