Wednesday 23 April 2014

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா

களிமேட்டில் அப்பர் பெருமான் சதய விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
தஞ்சை, ஏப் 24, தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் பெருமான் சதய விழா வரும் 25ம்தேதி முதல் 3 நாட்களுக்கு தஞ்சை களிமேட்டில் நடைபெற உள்ளது.

 மாமன்னன் ராஜராஜனுக்கு தஞ்சையில் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அப்பர் பெருமானுக்கோ திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா எடுக்கப்பட்டு வருகிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்ததாக கருத்து நிலவுகிறது. அப்பெருமானார் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குரு பூஜை நடைபெறுகின்றது. பல்வேறு தலங்களுக்கு சென்று பாடல்களைப் பாடியுள்ள அப்பர் பெருமானுக்கு அந்தந்தத் தலங்களில் விழா கொண்டாடுவது சிறப்பான ஒன்றாகும். ஆனால் அவரோடு தொடர்பில்லாத ஒரு சிற்றூரில் கடந்த 85 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர் சுவாமிக்கு குரு பூஜை விழா நடைபெறுகின்றது.
தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு என்னும் கிராமத்தில் விழா இப்போதும் நடக்கிறது. களிமேடு கிராமத்திலுள்ள குளத்தின் வட கரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இம்மடம் 90 ஆண்டுகளுக்கு முன், உயிர்க்கொலை பாவம் எனக் கருதிய ஊர்ப் பெரியவர்களால் உருவாக்கப்பட்டது.  இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான ஓவியம். குருபூஜை நாளன்று மலர்களைக் கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேர் வீதி உலா வரும். அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி மக்கள் வணங்குகின்றனர்.
இக்கிராமத்தில் ஆண்டுதோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இவ்வூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் 86ஆம் ஆண்டு சித்திரை சதய விழா 25, 26, 27.4.2014 மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிகமான ஊர்களில் மடங்கள் நிறுவப்பெற்றது அப்பருக்கு மட்டுமே என சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் தெரிவித்தார். 
நன்றி : தினகரன், 24.4.2014

No comments:

Post a Comment